Monday, January 24, 2011

பிரக்ஞை – சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு. - கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை

பிரக்ஞை – சிரி….சிரி…சிரிப்பு – இயற்கை தந்த பரிசு.

- கிழக்கு – மேற்கு விஞ்(ஞானி)களின் ஆய்வுகள் – ஒரு முன்னுரை

சிரிப்பு மனிதரின் இயற்கையான இசை.

மனம் விட்டு சிரி

யார் எங்கே தொலைத்தார்; தம் சிரிப்பை…?

யார் களவெடுத்தார் மனதரின் சிரிப்பை….?

யார் அடக்கினார் வரலாற்றில் மனிதரின் சிரிப்பை…?

சிரிப்பின் ஆரம்பம் மனிதக் குரங்குகளிலும் இருந்துள்ளது. இவை ஆறுதலாக இருக்கும் பொழுது சிரிக்கின்றன. குழந்தைகள் பிறந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களிலையே சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். இதற்கு குழந்தைகளுடன் விளையாடுவதும் அவர்களுக்கு கிளிகிளுப்புட்டுவதும் மற்றும் அவர்களுக்குள் ஏற்படுகின்ற மாற்றங்களும் காரணமாக இருக்கின்றன. ஆரம்ப கால மனிதர்கள், விளையாட்டாக நடைபெறும் சண்டை பிடிக்கின்ற சமூக நிகழ்வுகளில் பொதுவாக “ஆஹா…அஹா…அஹா…” என சிரிப்பதுண்டு என்கின்றனர். Dacher Keltner & George A. Bonanno என்பவர்கள் தங்களது சிரிப்பு தொடர்பான ஆய்வின் மூலம் பல விடயங்களைக் கூறுகின்றனர். இவ்வாறு மனிதர்கள் சிரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நோய்களைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்ல. தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகளை உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. தமது மேலாதிக்க தன்மையை வெளிப்படுத்துவதற்கு மனிதர்கள் சிரிப்பதாக டார்வின கூறுகின்றார். சிக்மன் பிரைடடோ> மனிதர்கள் தமது பதட்டமான உணர்ச்சிகளை வெளியேற்றுவதற்காக சிரிக்கின்றனர் என கூறுகின்றார். மனிதர்களது சிரிப்பு “ஹி…ஹி…ஹி…” என ஆரம்பித்து “ஹா…ஹா…ஹா” எனவும்> பின் “ஹோ…ஹோ…ஹோ” எனவும் தொடர்கின்றது. இதன்போது வாய் அகலமாக திறபட> முகத் தசைகள் தளர> இதயத் துடிப்பும் மூச்சும் அதிகரிக்க மனிதர்களது உடல் உள மன பகுதிகள் ஆறுதலடைகின்றன. மூளையின் சில பகுதிகளில் இதன்போது இயங்கி பல்வேறு விதமான றோமோன்களை வழங்குகின்றது. நேர்மறை உணர்வுகள் உணர்ச்சிகள் உருவாகின்றன. மனிதர்கள் ஆரோக்கியமான பார்வைகளையும் உறவுகளையும் கொண்டு ஆனந்தமாக வாழந்தனர். இன்றும் இவ்வாறு வாழலாம். ஆனால் மனிதர்களின் சிரிப்புக்கு என்ன நடந்தது?

மனித சிரிப்புக்கு வரலாற்றில் என்ன நடந்தது என்பதை அறிவதே ஒரு புதிய கட்டுரையைத் தரும். சுருக்கமாக பார்க்கும் பொழுது குறிப்பாக ஐரோப்பிய மையவாத சிந்தனைகளாலும் அது பரப்பிய மனித நாகரிகங்களாலும் மனதர்களது சிரிப்பு அடக்கப்பட்டு விட்டது. ஒரு சிலருக்கு மட்டுமே பொது இடங்களில் வாய்விட்டுச் சிரிப்பதற்கான உரிமை உள்ளது. இவர்கள் பலவகைகளிலும் சமூகத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதார பலம் கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக ஆண்களாக இருப்பார்கள். அதிகாரமில்லாத அல்லது அடக்கப்படும் ஆண்கள் மறைவாகவோ அல்லது தமது வீடுகளுக்குள் மட்டுமே சிரிப்பதற்கான உரிமை உள்ளது. இதற்குமாறாக அதிகாரத்தில் உள்ளவர்களின் முன் வாய் திறந்து சிரிப்பதானது அதிகாரத்தில்; உள்ளவர்கள் கேலி செய்வதாக அர்த்தப்படுத்தப்பட்டு சிரிப்பவர் தண்டைனைக்கும் உள்ளாகியுள்ளனர்;. மறுபுறம் பெண்ணிய பார்வையில்> பெண்கள் வீட்டிற்குள் கூட சிரிக்க முடியாத நிலையே இன்றும் பல சமூகங்களில் காணக்கிடைக்கின்றது என்பதைக் அறியலாம். இதனால்தான் தமிழ் சமூகங்களில் பொது இடங்களில் வாய் விட்டு சிரிக்கும் பெண்களை சமூகம் மதிக்காததுடன் அவர்களை கீழானவர்களாகவே கணிக்கின்றது. பொது இடங்களில் மேலும் புல சமூகங்களில் சிரிப்பவர்கள் பைத்தியக்காரர்களாகவும் கண்ட இடங்களில் சிரிப்பது அநாகரிகமாகவும் கணிக்கப்பட்டு சமூகங்களிலிருந்தும் பொது நிகழ்வுகளிலிருந்தும் ஓதுக்கி வைக்கப்படுகின்றனர். குறிப்பாக குடும்பங்களில் பாடசாலைகளில் மத நிறுவனங்களில் குழந்தைகள்; தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இவ்வாறு மனித வாழ்க்கை மட்டுமல்ல அவர்களிடம் இருந்து பிறந்த இயற்கையான இசையான சிரிப்புக்கு கூட வரலாற்றில் பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டு அதிகார வர்க்கங்களால் படாதபாடு படுத்தப்பட்டுள்ளது. அதை இன்னுமொரு சந்தர்ப்பத்தில் தனிக் கட்டுரையாக விரிவாக எழுதுகின்றேன். இக் கட்டுரையின் நோக்கம் சிரிப்பினால் ஏற்படுகின்ற உடல் உள மன மற்றும் ஆன்மாவிற்கான நன்மைகள் என்ன என்பதை அறிவதே.

சில சமூகங்களில் குறிப்பாக அமெரிக்க அலஸகாவின் வாழ்கின்ற பூர்வீக அல்லது செவ்விந்திய மனிதர்களின் சமூகங்களில் சிரிப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல பல நோய்களைக் குணமாக்குகின்றன மருந்து என்பது; அறிவதற்கு ஆச்சரியமான ஒன்று. இச் சமூகங்களில் சிரிப்பு என்பது யோக பயிற்சி செய்வதுபோல் அனைவருக்கும் குழந்தைகளிலிருந்தே பயிற்றுவிக்கப்படுகின்றது. ஏனனில் சிரிப்பானது தமது உடல் உள்ளம் மனம் என்பவற்றை சுத்தம் செய்கின்றனர் எனக் கூறுகின்றனர் (Cueva, Melany , etl., 2006). இந்த விபரங்களை சிரிப்பு தொடர்பாக Albert Nerenberg உருவாக்கிய Laughology என்ற விவரண திரைப்படத்திலும்; காணலாம். தமிழில் மனம் விட்டு சிரித்தால் நோய் விட்டும் போகும் என்று கூறப்படுவது நாம் அறிந்ததே. இதனால்தான் சிரிப்பை புற்றுநோய் மற்றும் உடல் நோ அதிகம் உள்ள நோயாளர்களுக்கும் ஒரு மருந்தாகப் பயன்படுத்தி அவர்களது நோவைக் குறைக்கப் பயன்படுத்துகின்றனர். மேலம் சிரிப்பானது சிரி;ப்பவருக்கும் மட்டுமல்ல அருகிலிருப்பவரையும் குணப்படுத்துகின்றது என்கின்றனர்.

மனிதருக்கு கிடைத்த இந்த இயற்கையான சிரிப்பின் மூலம் ஒருவரது உடல் உள மற்றும் ஆன்மாவிலுள்ள பல்வேறு நோய்களை உதாரணமாக மன அழுத்தம்> உடல் நோ> மனப்பாதிப்பு> எனப் பலவற்றைக் குணப்படுத்தலாம் என்க் கூறுவது ஓசோ மட்டுமல்ல மேற்குலகின் விஞ்ஞான ஆய்வாளர்கள் (Ruth Davidhizar and Margaret Bowen (1992). மறுபுறம் செயற்கையான சிரிப்பினால் பயனில்லை என மேற்குலகின் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிட்டாலும் பலர் செயற்கையான சிரிப்புக் கூட இறுதியில் உண்மையான சிரிப்பாக மாறுவதற்கான ஆற்றலுடையது என்பது மட்டுமல்ல அருகில் உள்ளவர்களுக்கும் வைரஸைப் போல தொற்றி விரைவாகப் பரவக் கூடியது என்கின்றனர். இப்படி சில முரண்பாடுகள் இருந்தபோதும் அனைத்து ஆய்வாளர்களும் ஒன்றுபடும் புள்ளி சிரிப்பு மனித வளர்ச்சிக்கும் உடல் உள மன மற்றும் ஆன்ம நலத்திற்க்கும் பயனுள்ளது என்பதாகும். இதற்கான காரணம் சிரிப்பு மனித உடலில் சில ஹோமன்களை சுரப்பதற்கு உதவி செய்கின்றது. குறிப்பிட்ட ஹோமோன்கள் மனிதர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது குறைவாக காணப்படுகின்றது. ஆகவே மனிதர்கள் சிரிக்கும் பொழுது இந்த ஹோமோன்கள் சுரந்து மன அழுத்தத்தை குறைப்பது உதவிபுரிக்கின்றன.

இது மட்டுமல்ல மனிதர்கள் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு பயிற்சியாக சிரிப்பார்களேயானால் அவர்களது உடலுக்கு அதிக சக்தியை அளித்து துடிப்பாகவும் இயங்கச் செய்கின்றது. மேலும் இது உடலில் குறிப்பாக முகத்தில் உள்ள இறுக்கமான தசைகளை இலகுபடுத்துவதன் மூலம் இயங்கச் செய்து மனிதர்களுக்கு அமைதியையும் உடலுக்குhன ஆறுதலையும் வழங்குகின்றது என்கின்றனர். (Davidhizar & Bowen, 1992, Martin, 2001). இன்னும் ஒரு படி மேல் சென்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் சிரிக்கின்ற சிரிக்காத மனிதர்களுக்கு இடையிலான ஒப்பிட்டு ஆய்வின் அடிப்படையில்; சிரிக்கின்ற மனிதர்களுக்கு மன அழுத்தம் மனச் சோர்வு என்பன வராமலே சிரிப்பானது தடுக்கின்றது என்கின்றனர். (Kuiper, and Martin, 1998). இதேபோல் சிரிப்பு புற்றுநோய் செல்களும்; அதன் வைரஸ{களும் பரவாமல் தடுக்கின்றதும் அவற்றைக்; கொல்கின்ற செல்களின் உருவாக்கத்தை சிரிப்பதன் மூலம் அதிகரிக்கச் செய்கின்றது. இதற்கு நோர்மன் கசின்ஸ் (Norman Cousins) என்பவரது அனுபவமும் அவரது புத்தகமும் ஆதாரமாக இருக்கின்றது. இவர் எழும்பி தன்னால் ஒன்றுமே செய்ய முடியாத வகையிலான ஒரு நோய்க்கு உள்ளாகியிருந்தார். இவரது செயற்பாடு எல்லாமே தள்ளு வண்டி மூலமே நடைபெற்றது. இவ்வாறு இருக்கின்ற ஒரு நிலையில் தான் சிரிக்கும் பொழுது தனது உடல் நோ குறைவதையும் ஆழமான நித்திதை கொள்வதையும் அவதானித்திருக்கின்றார். இறுதியாக சிரிப்பை ஒரு மருந்தாகப் பயன்படுத்தி எழும்பி சுயமாக நடக்கும் அளவிற்கு குணமானார். இவர் குணமானதற்கான காரணங்கள் தொடர்பாக பல வாதப்பிரதி வாதங்கள் இருந்தபோதும் மேற்குலகின் வைத்திய உலகிற்கு சிரிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்த இவரும் இவரது நூலும் காரணமாயின. இவரது கூற்றின் படி பத்து நிமிட வயிறு குலுங்கி சிரிக்கும் சிரிப்பானது உடல் நோவைக் குறைப்பது மட்டுமல்ல இரண்டு மணித்தியால ஆழமான நித்திரையையும் தருகின்றது என்கின்றார். மேலும் சிரிப்பானது மனிதர்களது கோவத்தையும் மனப் பயத்தையும் குறைக்கின்றதும் என்கின்றனர்.

முதலில் சிரிப்பானது உளவியல் அடிப்படையில் ஒரு மாற்றத்தை மனிதரில் ஏற்படுத்துகின்றது. அதாவது எதிர்மறைத் தன்மையிலிருந்து நேர்மறைத் தன்மைக்கு மனிதரது உணர்ச்சிகளை மாற்றிவிடுகின்றது. அல்லது அதிகாரத்துவ தன்மையிலிருந்து புரிந்துணர்வு தன்மைக்கு மாற்றிவிடுகின்றது. இதனால் மனிதர்களிடம் இருந்த மன சோர்வு மன அழுத்தம் குறைந்து ஒரு விதமான சுய பிரக்ஞை நிலைக்கு வருகின்றனர். இது நேர்மைற உணர்வுகளை மனிதரில் உருவாக்கின்றது. இவ்வாறான ஒரு உறவு சிரிப்புக்கும் மனித உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் மற்றும் மனித உள நிலைமைக்கும் இருக்கின்றன. அதிகமாக சிரிக்கின்ற மனிதர்களது வாழ்வில் தனிப்பட்ட நேர்மறை சம்பவங்கள் அதிகமாகவும் சிரிக்காத மனிதர்களது வாழ்வில் தனிப்பட்ட எதிர்மறை சம்பவங்கள் அதிகமாகவும் நடைபெற்றுள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. சிரிப்பானது ஒரு குழுவிற்கு மேலும் ஒருமைப்பாட்டை உருவாக்குகின்றது. இதனால் இருவர் தமக்கிடையிலான முரண்பாடுகளையும் ஆரோக்கியமாகவும் நேர்மறைத் தன்மையுடனும் தீர்ப்பதற்கு சிரிப்பு வழிசெய்கின்றது. ஆகவே குறிப்பாக காதலர்களுக்கிடையல் திருப்திகரமான உறவை சிரிப்பு ஏற்படுத்துகின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களுக்கு அவர்களது உறவுகளின் இறப்பினால் ஏற்படும் துக்கத்தையும் அதனால் ஏற்படும் மனச் சோர்வு மன அழுத்தம் என்பவற்றையும் அவர்களது வாழ்வையும் நேர்மறைத் தன்மையானதாக சிரிப்பு மாற்றியுள்ளது என இது தொடர்பான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிரிப்பின் முக்கியத்துவத்தை முதலில் ஆழமாக நான் அறிந்தது ஓசோவின் மூலம். இவர் சிரிப்பை மூன்று பகுதிகளாக அடிப்படையில் பிரிக்கின்றார். முதலாவது பிறரைப் பார்த்து சிரிப்பது. அதாவது அவர்களது தவறுகள் குறைகள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களை கிண்டல் அல்லது நையாண்டி செய்து சிரிப்பது. இந்த சிரிப்பை அவர் மதிப்பதுமில்லை உற்சாகப்படுத்துவதுமில்லை. இச் சிரிப்பை அவர் கீழ் நிலையிலையே வைத்தள்ளார். தமிழ் படங்களில் மட்டுமல்ல உலகலாவிய ரீதியில் வருகின்ற பெரும்பான்மையான வணீக ரீதியான திரைப்படங்களில் வருகின்ற சிரிப்புப் பகுதிகள் இந்த வகைகுள் அடங்கும். இதற்கு எதிர்மறைத் தன்மை இருந்தபோதும், மனிதர்களுக்கு சிரிப்பை உருவாக்கின்றமையினால் அதிலும் நேர் மறைத் தன்மையையும் பெருகின்றது. இரண்டாவது வகை இடைநிலையானது. அதாவது நமது தவறுகள் குறைகள் கோமாளித்தனங்களை நாமே பார்த்து சிரிப்பது. இது ஒரளவு பாரவாயில்லை எனக் கூறுவார். இவ்வாறு சிரிப்பது, குறித்த ஒரு பிரச்சனையை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு உதவும் என்கின்றார் ஐரோப்பாவைச் சேர்ந்த வைத்திய ஆய்வாளர் (Sutorius, D., 1995).

மூன்றாவது சிரிப்பு முக்கியமானதும் உயர்ந்ததுமாகும். இது சிரிப்பதற்கா மட்டும் சிரிப்பது. சிரிப்பதன் நோக்கமே சிரிப்பதுதான். சிரிப்பதன் நன்மைக்காகவே சிரிப்பது. சிரிக்கின்றோம் என்பதற்காகவே சிரிப்பது. இதில் நம்மை மட்டுமல்ல பிறரையும் அவமதிப்பதோ நையாண்டி செய்வதோ இல்லை. இவ்வாறான சிரிப்பு பயிற்சியில்; கவரப்பட்டு அவரால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிஸ்டிக் ரோஸ் (mystic rose) எனப்படும் சிரிக்கும் தியான பயிற்சியில் இந்தியாவிற்கு சென்று பங்குபற்றினேன். இப் பயிற்சி 21 நாட்கள் நடைபெறும். முதல் ஏழு நாட்களும் சிரிப்பது மட்டுமே நமது வேலை. மூன்று மணித்தியாலங்கள் மிகவும் ஆழமான சிரிப்பு பயிற்சி. அதாவது வயிற்றைக ;குலுக்கி குலுக்கி சிரிக்க வேண்டும். சிரிப்பு ஆழமாக செல்ல அழுகை வரும். வந்தாலும் சிரிப்பது மட்டுமே நமது வேலை. மற்ற நேரங்களிலும் சிரிப்பதுதான் நமது வேலை. சாப்பிடும் பொழுதும் சும்மாக இருக்கும் பொழுதும் சிரிப்பது ஒன்றே நமது செயற்பாடு. இரண்டாவது ஏழு நாட்களும் ஆழுவது மட்டுமே வேலை. இப்பொழுது சிரிப்பு வந்தாலும் அழுவதை மட்டுமே செய்ய வேண்டும். அழுவது மட்டுமே நமது ஓரே செயற்பாடாக இருக்கும். மூன்றாவது ஏழு நாட்களும் அமைதியாக கண்முடி உள்ளே நடப்பதை கவனிப்பது. தியானிப்பது. இது நம்மை மீண்டும் சுதந்திரமான மனிதராக்கும் என்பது அவரது அனுபவம். மற்றும் புரிதல்.

இவ்வாறு மூன்று பகுதிகளாக இப் பயிற்சிசை செய்வதற்கு இவர் கூறுகின்ற காரணம் முக்கியமானது. அதாவது நாம் வாழுகின்ற சமூகத்தின் பிற்போக்கான சட்ட திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குப் பயந்து நாம் அடக்கியவை எல்;;லாம் நமக்குள் ஒவ்வொரு தளங்களில் இருக்கின்றன என்கின்றார். சிரிப்பது முதல் தளத்திலையே தனது வேலையை செய்தபோதும் நம் உடல் மற்றும் உள்ளத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது என்கின்றார்.. அழுகை நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்கின்றது என்கின்றார். இதன் போது நாம் நீண்ட காலமாக அடக்கிய பல உணர்வுகள் உணர்ச்சிகள் வெளிவருவதற்கான சாத்தியங்களும் உள்ளன என்கின்றார்.

சமூக கட்டுபாடுகள் அடக்குமறைகளை பிரக்ஞையாக உணர்ந்து புரிந்தபோதும் அவற்றை மீறவோ அதிலிருந்து விடுதலை பெறவோ முழுமையாக முடியவில்லை. ஏனனில் அந்தளவிற்கு இந்த சமூக அடக்குமுறைகள் ஆழமாக நமக்குள் வேருண்றி இருக்கின்றன. அதாவது சமூகம் நம் மீது திணித்த இயற்கைக்கு அப்பாற்பட்ட யதார்த்தமற்ற நாகரிக வாழ்வுக்குள் நாம் சிக்குண்டு போய்யுள்ளோம்.

இறுதியாக தங்களுக்கான புத்தாண்டு பரிசு. நாங்கள் மறந்துபோன எங்களது சிரிப்பே. எப்படி நம் சிரிப்பை கண்டுபிடிப்பது. இது தான் அதன் இரகசியம். முதலில் வாயை அகலத் திறவுங்கள். இப்பொழுது பின்வருகின்ற சொல்லை சத்தமாக உச்சரியுங்கள். “ஹி…ஹி…ஹி” …. “ஹா…ஹா…ஹா” … “ஹோ…ஹோ…ஹோ” இப்பொழுது நீங்கள் வாய் விட்டு சிரிக்கின்றீர்கள். இவ்வாறு சிரிக்கும் பொழுது உங்கள் வயிற்றைக் குலுக்குவதுடன் உடலையும பலவாறு அசையுங்கள். ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாக சிரித்த பின்பு கண்களை மூடி மீண்டும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அமைதியாக இருப்பது உண்ட உணவை சமிக்க வைப்பதைப்போன்றது. இந்த நிலையின் போது நம்முள்ளே என்ன நடைபெற்றாலும் அதை எந்தவிதமான மதிப்பீடுகளும் இல்லாது கவனிப்பது மட்டும் செய்யவேண்டிய செயற்பாடு. இதை சிரிக்கும் தியானம் அல்லது சிரிக்கும் புத்தர் தியானம் எனவும் அழைக்கலாம். ஓவ்வொருவரும் இவ்வாறு செய்து புத்தாண்டை சிரிப்புடன் சிறப்புடன் வரவேற்போம்.

சிரிப்பு இயற்கையின் இசை. மனிதர்களோ அதை இசைக்கும் வாத்தியம். இந்த இசை மனிதர்களுக்கு இயற்கை தந்த பரிசு. இந்தப் பரிசை சரியாக நாம் பயன்படுத்தினால் அருகிலிருக்கின்ற சிரிக்காத மனிதரையும் சிரிக்க வைக்கலாம். இது ஒரு சிரிப்பு வைரஸாக பரவும். நம் வாழும் இடங்களிலிருந்தே இந்த சிரிப்பு வைரஸை உலகின் பல பாகங்களுக்கும் அனுப்புவோம். குறிப்பாக இது தமிழ் கட்டுரையாக இருப்பதால் உலகில் வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற மனிதர்களுக்கும் குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களுக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும் அதிலும் குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒரு மருந்தாக இது பயன்படட்டும்.

நம் மீது சுமத்தப்பட்ட செயற்கையான நாகரிகங்களுக்காகவும் மற்றும்; யாருக்காகவும் பயந்து நமது சிரிக்கின்ற உரிமையை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. இந்த புத்தாண்டு என்பதும் கட்டமைக்கப்பட்டு கற்பிக்கப்பட்ட ஒரு விடயமே. உண்மையிலையே ஒவ்வொரு நாளும் புது நாளே. ஆனாலும் ஒவ்வொரு புத்தாண்டையும் நேர்மறையாக பயன்படுத்துவோம். ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் வாய்விட்டுச் சிரிப்போம். நம் நோய் விட்டுப் போகும் மட்டுமல்ல. அனைவருக்கும் ஆனந்தம் பிறக்கும் மட்டும். சிரிப்போம்! வாய் விட்டுச் சிரிப்போம்.

சிரிப்பதற்கு கஸ்டமா. ஆப்படி எனின் அழையுங்கள். உங்களுக்கு அல்லது உங்கள் குழுவிற்கு சிரிப்பை வரவழைப்பதற்கு.

மீராபாரதி

31.12.2010

Davidhizar, R. and Bowen, M. (1992). The Dynamics of Laughter. Archives of Psychiatric

Nursing, 6(2) 132-137

Kuiper, N. A. and Martin, R. A. (1998). Laughter and Stress in Daily Life: Relation to

Positive and Negative Affect. Motivation and Emotion, 22(2), 1998.

Martin, R.A., (2001). Humor, Laughter, and Physical Health: Methodological Issues and

Research Findings. Psychological Bulletin, 127(4), 504-519

Sutorius, D., (1995). The transforming force of laughter, with the focus on the laughing

meditation. Patient Education and Counseling, 26, 367 – 371.

Dacher Keltner & George A. Bonanno A Study of Laughter and Dissociation: Distinct Correlates of Laughter

and Smiling During Bereavement. Journal of Personality and Social Psychology, 1997, Vol. 73, No, 4, 687-702

Cueva, Melany , Kuhnley, Regina , Lanier, Anne and Dignan, Mark(2006) ‘Healing Hearts: Laughter

and Learning’, Journal of Cancer Education, 21: 2, 104 — 107

Norman Cousins (1976) . “Anatomy of an Illness” . New England Journal of Medicine,

Albert Nerenberg, Laughology, http://www.albertnerenberg.com/AlbertNerenberg/Albert_Nerenberg.html

No comments: