Tuesday, August 24, 2010

பிரக்ஞை: ஆரோக்கியமான படைபாற்றாலுக்கான மூலம்!

பிரக்ஞை: ஆரோக்கியமான படைபாற்றாலுக்கான மூலம்!

பிரபல்யமான மனிதத்துவ (humanistic) உளவியளாளரும் மனிதரை மையப்படுத்திய உளவியல் சிகிச்சைக்கு (person-centered therapy) முக்கியத்துவமளிக்கும் முறைமையையும் உருவாக்கிய கார்ல் ரொஜர்ஸின் (Carl Rogers) மகளான நட்டாலி ரொஜர்ஸின் (Natalie Rogers) Creativity Connection Expressive Arts as Healing என்ற நூலை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் அந்த நூலில் கூறப்பட்ட முக்கிய விடயங்களின் சுருக்கமாகவும் இக் கட்டுரை எழுதப்படுகின்றது. ஆகவே புதிய மற்றும் ஆரோக்கியமான நல்ல கருத்துக்கள் இதில் இருந்தால் அவை அவருக்கு சொந்தமானவையே என்பதை இங்கு கூறுவது முக்கியமானது. இந் நூலின் ஆசிரியர், ஒரு உளவியளாளராக இருப்பதனால், மனிதர்களின் கலைத்துவ படைப்பாற்றலை வெளிப்படுத்தும் முறைமை (Expressive Arts) மூலமாக அவர்களது உளவியல் பிரச்சனைகளை எவ்வாறு குணமாக்குவது என்றும் மற்றும் அவர்களது ஆற்றல்களை அவர்களே கண்டறிவதற்கான வழிமுறைமைகளையும் இந்த நூலில் குறிப்பிடுகின்றார். இதற்கான தனதும் பிறரதும் பல்வேறுவகையான பரிசோதனை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மேலும் இவர் பெண்ணியம் தொடர்பான பிரக்ஞையையும் கொண்டுள்ளதால், இவரது பெண்ணிய சிந்தனையின் விளைவாக Emerging Women: A Decade of Midlife Transitions என்ற இன்னுமொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இந்த நூலிலும் இவரது பெண்ணிய பார்வை இருக்கின்றது.

இன்று நாம் வாழும் இந்த உலகம் பல்வேறுவிதமான புதிய புதிய பிரச்சனைகளை நாள்தொரும் உருவாக்குகின்றது. இப் பிரச்சனைகளை தனி மனிதர்களாகவும் ஒட்டுமொத்தமான முழு சமூகமாகவும் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ளவேண்டி வருகின்றது. ஆனால் அதற்கான தீர்வுகளும் தீர்வை முன்னெடுக்கும் முறைமைகளும் பழமைவாய்ந்தவையாகவும் மற்றும் வழமையான சில முறைமைகளையுமே மீண்டும் மீண்டும் பின்பற்றும் நடைமுறையையும் நாம் கொண்டுள்ளோம். இதனால் மேலும் பல புதிய சிக்கலான பிரச்சனைகள் முளைப்பதற்கு காணரமாகின்றன. இதன் காரணமாகவே பல பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் அல்லது தீர்க்க முடியாமல் இருக்கின்றன. இவ்வாறான பழமை வடிவங்கள் அல்லது முறைமைகளுக்கு மாறாக புதிய ஆரோக்கியமான படைப்பாற்றல் கொண்ட தீர்வுகளையும் வழிமுறைமைகளை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பதற்கு இந்த நூலின் ஆசிரியர் கூறும் அணுகுமுறைகள் மற்றும் கருத்துக்கள் பயனுள்ளவையாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இக் கட்டுரை எழுதப்படுகின்றது. ஏனனில் நாம் குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்கள் அவ்வாறான ஒரு சுழலில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமகால பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அல்லது கடந்து செல்வதற்கு, நமக்கு புதிய சிந்தனைகளும் பார்வையும் எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வதற்கான நம்பிக்கையும் இன்று அவசரமாகவும் அவசியமாகவும் தேவைப்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.

நாம் நம்மை புரிந்துகொள்ள முடியாமல் இருப்பதும் இதானால் மற்றவர்களை புர்pந்து கொள்ள முடியாமலிருப்பதும் பல தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கும் மற்றும் அவற்றைத் தீர்க்கமுடியாமலிருப்பதற்கும் காரணமாக இருக்கின்றது என்றால் மிகையல்ல. ஒருவரை ஒரளவு முழுமையாக அறிவதற்கு ஒருவரது பேச்சு எழுத்து என்பவற்றை கேட்பதற்கும் வாசிப்பதற்கும் மேலாக அவர் வெளிப்படுத்தும் குறியீட்டு அம்சங்களையும் உதராணமாக நிறம், வடிவம்; மற்றும் அவரது உடல் அசைவு குரலின் தன்மை பார்வை என பலவற்றைக் கவனிப்பது முக்கியமானதும் பயனுள்ளதுமாகும். எனனில் ஒருவர் மேற்குறிப்பிட்ட குறியீட்டு அம்சங்களை பிரக்ஞையற்ற நிலையிலையே பெரும்பாலும் வெளிப்படுத்துவார். இவ்வாறு பிரக்ஞையற்று வெளிப்படுத்தப்படும் விடயங்கள் பல்வேறு காரணங்காளால் அடக்கப்பட்ட ஒருவரின் உள்ளக்கிடக்கைகளான ஆசைகள் உணர்வுகள் உணர்ச்சிகள் என்பனவாகும். குறிப்பாக ஒவ்வொருவருடைய மனமும் தமது படைப்பாற்றல் திறன் தொடர்பாக எதிர்மறையான மதிப்பீடைக் கொண்டிருக்கும். உதாரணமாக என்னால் முடியாது, எனக்குத் தெரியாது, குறிப்பிட்ட ஆற்றல் என்னிடம் இல்லை, குறிப்பிட்ட செயற்பாட்டிற்கும் எனக்கும் தொடர்பில்லை, என பலவற்றைக் கூறலாம். இதற்கு இக் குறிப்பிட்ட மனிதருக்கு கடந்தகாலத்தில் பிற மனிதர்களால் முன்வைக்கப்பட்ட அல்லது ஏற்பட்ட தவறான மதிப்பீடுகள், மற்றும் புரிதல்கள் மூலம் உருவான கசப்பான எதிர்மறையான அனுபவங்கள்; காரணமாக இருக்கலாம். இவ்வாறான எதிர்மறை அனுபவங்கள் நடைபெறுவதற்கு நமது சமூகங்களும் அதன் அங்கத்தவர்களான பெற்றோர் உறவினர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பவர்களும் முக்கியமான காரணகர்த்தாக்களாக பெரும்பாலும் இருக்கின்றனர். இவர்களில் பலர், ஒருவரின் தனித்துவத்தையும் அவரது ஆற்றலையும் முளையிலையே அழித்துவிடுகின்றனர். ஏனனில் இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த படைப்பாற்றல் தொடர்hபான மதீப்பீடு ஒன்று ஏற்கனவே இருக்கும். ஆகவே இவர்களுக்கு இத் துறைசார்ந்த அறிவு மட்டுப்படுத்தப்பட்டதாகவும் பன்முகத்தன்;மையற்றதாகவும் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இவர்களது மதீப்பீடு சரியானது தவறானது என்பதற்கும் அப்பால் தமது மதிப்பீட்டை அனைவருக்கும் பொதுவானதாக்கி அதனடிப்படையிலையே ஒருவரை மதிப்பிடுவதுடன் அவருக்கு ஒரு முத்திரையையும் குத்திவிடுவர். இதன் மூலம் ஒருவரது தனித்துவ படைப்பாற்றலானது சிறுவயதிலையே எதிர்மறையாக மதிப்பிடப்பட்டு அடக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது. அல்லது வேருடன் பிடிங்கி ஏறியப்படுகின்றது. மறுபுறம் நாம் வாழுகின்ற ஆணாதிக்க சமூகம் ஆண்களின் பெண்மையையும் பெண்களின் ஆண்மையையும் அடக்கியே வந்துள்ளன. இதனால் மனிதர்களின் ஒரு பகுதி ஆற்றல் மட்டுமே அவர்களின் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. மறுபகுதி பயன்படுத்தப்படாமல் இருப்பது மட்டுமல்ல அவ்வாறன ஒரு ஆற்றல்; நம்மிடம் இருக்கின்றது என்ற பிரக்ஞை கூட இல்லாதிருக்கின்றோம் என்பது மிகவும் துரதிர்ஸ்டமானது. இவற்றின் விளைவாக நம் மனதுக்குள் எதிர்மறையான பல விடயங்கள் விதைக்கப்படுகின்றன.

நமது சுய-உள் விமர்சகர் (internal self-critic) நம்மிடம் எந்தவகையான படைப்பாற்றலும்; இல்லை எனவும் பிறரிடமே இருக்கின்றது ஒப்பிட்டு நம்மை குறைத்து மதிப்பிடுவதுடன் நமது மனம் அவ்வாறாக சிந்திப்பதற்கும் அதன்வழி நகருவதற்கும் வழிகோல்கின்றது. இதனால் நமது சுய-உள் விமர்சகரின் முக்கியத்துவமான பங்களிப்பை குறைத்து மதிப்பிடவோ புறந்தள்ளவோ இல்லை. இவருக்கு இரண்டுவிதமான பணிகள் இருக்கின்றன. ஒருபுறம் இந்த சுய-உள் விமர்சகர் நாம் ஆ;ரோக்கியமான வழிமுறைகளில் படைப்பாற்றலுடன் செயற்படுவதற்கும் உறுதுணையாக இருக்கின்றார். உதாரணமாக நாம் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலை நோக்கியும் அவர்களின் நன்மைக்காகவும் மற்றும் நமது சுய வளர்ச்சியை நோக்கி;யும் செயற்படுவதற்கும் இந்த சுய-உள் விமர்சகர் பயன்படுகின்றார். இவ்வாறன சந்தர்ப்பங்களில் இது நேர்-மறையான பாத்திரத்தை ஆற்றுகின்றது. மறுபுறம் நமக்கு வெட்கம், பயங்கரம், தோற்றுப்போவோம் என்ற பயம், போன்ற பல்வேறு எதிர்மறை உணர்வுகளையும் சிந்தனைகளையும் தடை கற்களாக இது தருகின்றதாக இருக்கின்றபோது நமக்கு பயனில்லாதவராகின்றது. இச் சந்தர்ப்பங்களில் எதிர்-மறையான பாத்திரத்தை ஆற்றுகின்றது. குறிப்பாக பயம் என்பது பிற மனிதர்களின் விமர்சனங்களுக்கான பயம், ஒரு செய்ற்பாட்டில் தோல்வி ஏற்படலாம் என்ற பயம், பிறரால் தவறுதலாக புரிந்துகொள்ளப்படலாம் என்ற பயம், தெரியாத ஒன்றைப் நோக்கிப் பயணிக்கின்றோம் அல்லது செயற்படுகின்றோம் என்பது பற்றிய பயம், எனப் பயம் என்பது பலகைப்படும். மேற் குறிப்பிட்டவையெல்லாம் நம் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவருதற்கு தடைகளாக மட்டுமல்ல தடுத்து நிறுத்துவனவாகவும் இருக்கின்றன. இதற்குக் அடிப்படையில் காரணமாக இருப்பது நம்மைப் பற்றிய பிரக்ஞை நம்மிடம் என்றும் இருந்ததில்லை அல்லது குறைவாகவே இருக்கின்றது எனலாம்.

உதாரணமாக குறிப்பாக பெண்கள் நீண்ட காலமாக கணவருக்கும் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும் பணிவிடை செய்வதற்காகவே பயிற்றிவிக்கப்பட்டதால் அதுவே அவர்கள் பிறந்ததற்கான நோக்கம் மற்றும் அவர்கள் செய்யவேண்டிய கடமை என நம்பவைக்கப்பட்டதால் அவர்களது வாழ்க்கை அதுவாகவே இருக்கின்றது. இதனால் அவர்கள் தங்களையும் தங்களது ஆற்றல்கள் பற்றியும் சுய-பிரக்ஞை இல்லாமலே தமது வாழ்க்கையை வாழ்கின்றனர். அல்லது அது தொடர்பான தமது பிரக்ஞையை இழந்திருக்கின்றனர். நமது கலாசாரங்கள் ஒரு புறம் பெண்களை இவ்வாறு பயிற்றுவிக்கும் அதேவேளை, சமூகத்தின் மேலாதிக்க சிந்தனைகள் தர்க்கவியல், நேர்கோட்டுதன்மை, ஆண்மைத்தனம் போன்ற ஆற்றல்களை குறிப்பாக ஆண்களுக்குப் பயிற்றுவிக்கின்றனர்;. மேலும் இவற்றையே சமூகத்தில் முதன்மைப்படுத்துவதுடன் சமூகத்தின் மேன்மையான பண்பாகவும் அடிப்படையாகவும் கட்டமைக்கின்றனர். இதனால் ஆண்கள் ஆழகியல், கற்பனை, பணிவு, விளையாட்டு போன்ற தன்மைகளை ஏற்காதவர்களாகவே பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஆகவே இவ்வாறன தன்மைகளை ஆண்கள் ஓதுக்கியே வந்துள்ளனர். இவற்றையும் மீறி ஆண்களிடம் இவ்வாறன பண்புகள் வெளிரும் பொழுது அடக்கிவிடுவது ஆண்களின் இயல்பாகிவிட்டது. இதனால் இவர்களுக்கு நிறங்கள் மற்றும் ஆடல்கள் போன்ற கலைப்பண்புகள் மூலம் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது முட்டாள்தனமான ஒரு செயற்பாடு என நம்புகின்றனர். இதன்காரணமாக ஆண்கள் பெண்கள் உட்பட அனைத்து மனிதர்களும் தமது முழுமையான இயற்கையான படைப்பாற்றலை இழந்துள்ளனர் என்றால் மிகையல்ல. தமது இயற்கையான படைப்பாற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கு முதலாவது ஒவ்வொருவரும் தம்மை தாமாக ஏற்றுக்கொள்ளவும் தாம் தனித்துவமானவர்கள் என புரிந்துகொள்ளவும் அதற்கமைய தம்மை பழக்கவும் பயிற்றுவிக்கவும் வேண்டியது அவசியமானது. அதேவேளை சமூகத்தால் ஊட்டப்பட்ட நம்முள் உள்ளார்ந்திருக்கும் எதிர்மறை மதிப்பீடுகளை புரிந்துகொண்டு அவற்றை தம்மிலிருந்து அகற்றவும் அல்லது அதைக் கடக்கவும் வேண்டிய தேவை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

தனி மனிதர்கள் எதிர்கொள்ளும் தமது சுய மற்றும் சமூகத்தால் ஏற்படுத்தப்பட்ட தடைகளை கடப்பதற்கு கார்ல் யங் (Carl Yung) என்ற உளவியளாளர் என்ன கூறுகின்றார் எனின்; நமது ஆன்மாவின் நிழல் தொடர்பான பிரக்ஞை நமக்கு வேண்டும் என்கின்றார். இந்த நிழல் என்பது நமது ஆன்மாவின் இன்னுமொரு பகுதி. இதைப்பற்றி நாம் பெரும்பாலும் அறியாது இருக்கின்றோம் அல்லது இது நமது பிரக்ஞையற்றதன்மையின் ஆழத்தில் அமிழ்ந்துபோய் இருக்கின்றது. இவ்வாறு பிரங்ஞையின்மைக்குள் நாம் கட்டுண்டு கிடப்பதற்கு காரணங்கள் பல. உதாரணமாக நமது இளமை அல்லது கடந்த கால நினைவுகளை மீண்டும் நினைவுக்கு கொண்டுவர விருப்பமில்லாதளவு கசப்பான அனுபவங்களாக இருப்பது ஒரு காரணம். மேலும்; சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயற்படவோ வெளிப்படுத்தவோ முடியாது நாமே அடக்கிய விடயங்களுமே இவ்றாறு நமது பிரக்ஞையின்மைக்குள் கட்டுண்டு உள்ளன என்றால் மிகையல்ல. அதாவது நமது ஆன்மா மற்றும் உடலிலும் இயற்கையாக இயல்பாக உருவான நமது உணர்வுகளினதும் உணர்ச்சிகளினதும் நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, அடக்கப்பட்ட பகுதிகளே, நமது நிழலாக நம்முடன் பிரக்ஞையற்ற நிலையில் வாழ்கின்றன. இவை, உதாரணமாக அமுக்கப் பாத்திரத்திற்குள் இருக்கும் வாயு அல்லது கொதிக்கும் நிரைப் போன்று நமக்குள் நிலையற்று அலைந்து கொண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் இதற்குள் மிகப் பெரும் சக்தி அடங்கியிருக்கன்றது. இதுமட்டுமல்ல, இந்த பிரக்ஞையற்ற நிழல் நம்முடனிருப்பதற்காகவே பெரும்பாலான நமது நாளாந்த வாழ்க்கைச் சக்தியை நம்மிடமிருந்து எடுத்தே பயன்படுத்துகின்றது. இதானல்தான் நாம் உற்சாகமாக துடிப்புடன் வாழாது பல சந்தர்ப்பங்களில்; நமது மூட்டுக்களில் நோவும், தசைநார்களில் பதட்டமும், இதயத்தில் படபடப்பும் ஏற்படுகின்றது என குறை கூறிக்கொண்டும் அவ்வாறு ஏற்படுவனவற்றுக்கு முக்கியத்துவமளித்து முதன்மைப்படுத்துக்கொண்டும் நமது நாளாந்த வாழ்வை சலிப்பாக சக்தியற்று துடிப்பற்று வாழ்கின்றோம். இது மிகவும் துர்ப்பாக்கியமான ஒரு நிலையாகும்.

ஒரு புறம் இந்த பிரக்ஞையற்ற நிழலே நமது வாழ்வை பல அல்லது அநேகமான சந்தர்ப்பங்களில் திர்மானிப்பதாக இருக்கின்றது. மறுபுறம் இந்த இருண்ட பிரக்ஞையற்ற இரகசிய உலகத்தை நமது பிரக்ஞைக்கு கொண்டுவந்து நேருக்கு நேர் பார்ப்பதற்கு நமக்கு பயமும் தயக்கமும் இருக்கின்றது. மறுபுறம் நம்மிடமிருக்கின்ற ஆற்றலை நாம் ஏற்றுக்கொள்வதிலும் நமக்குப் பிரச்சனையுமிருக்கின்றது. ஆனால் நம்முடன் நமது பிரக்ஞையற்ற நிழல் வாழ்வதற்காக நமது சக்தியின் பல மடங்கை செலவு செய்கின்றோம் என்பதை பிரக்ஞைபூர்வமாக நாம் என்றும் உணர்வதில்லை. அதைப் பற்றிய அக்கறையும் நமக்கு இல்லை. அவ்வாறு பிரங்ஞைபூர்வமாக உணரும் போது நமது இயற்கைச் சக்தியை அதிகமாக நாம் சேமிப்பது மட்டுமல்ல நமது வாழ்வை நமது பிரக்ஞையற்ற நிழல் தீர்மானிப்பதிலிருந்து; விடுவித்து நாமே நமது வாழ்வை ஆரோக்கியமான வழியில் பிரக்ஞைபூர்வமாக தீர்மானிப்பதற்கு வழியேற்படுத்துகின்றோம். ஆகவே நாம் பிரக்ஞையுடன் வாழ்வதற்கு நம்மை பயிற்றுவிக்க வேண்டும்.

நாம் ஒவ்வொரு கணமும் பிரக்ஞையுடன் வாழும் பொழுது இந்த நிழலின் ஆழத்திற்கு சென்று பிரங்ஞை என்ற ஒளி மூலம் நமது பிரக்ஞையற்ற நிழலை பார்ப்பதற்காக நாம் பயமின்றி துணிவுடன் ஒரு முடிவுவை எடுப்போமானால் நன்மைகள் பல. உதாரணமாக நமது படைப்பாற்றலை, நமது பலத்தை, நமது தீவிர அல்லது கிளர்ச்சித்தன்மையை, நமது நுண்ணுணர்வாற்றலை, நமது காம மற்றும் காதல் சக்தி என நமது பல்பரிமாண படைப்பாற்றல்கைளைக் கண்டுபிடிக்கலாம். இவ்வாறாக நமது நிழழை பார்ப்பதற்கான ஒரு முடிவுவை எடுப்பதற்காக சிந்திப்பதும் அதை நடைமுறையில் செயற்படுத்துவதும் ஆபத்தானதாக இருந்தபோதும் நமது சுயவளர்ச்சிக்கு முக்கியமானது என உணரும் பொழுது ஆபத்துக்கள் ஒரு பொருட்டல்ல. ஆனால் நமது வாழ்கை அனுபவம் இந்த நிழலை ஏற்றுக்கொள்வது இலகுவான விடயமாகவும் அதேவேளை பிரக்ஞையுடன் நேரடியாக சந்திப்பது என்பது சற்றுக்கடினமானது இருப்பதாகவே உள்ளது. ஏனனில் நமது நிழலை பிரக்ஞையுடன் நேருக்கும் நேர் சந்திப்பதானது நமது பொய்மைகள் பலவற்றை நமக்கு வெளிச்சமிட்டு காண்பிக்கும். இருப்பினும் நமக்குள் சற்றுத் துணிவை வரவழைத்து சந்தித்துவிடுவோமாயின் நமக்குளிருக்கும் பல உளவியல் பிரச்சனைகள் தீர்வது மட்டுமல்ல அதற்கான தீர்வைக் காணுவதற்கும், நமது நேர் மறைப் பண்புகளும் ஆரோக்கியமான படைப்பாற்றல்களும் வெளிவருவதற்கும் நமக்கான பாதையை நாமே திற்ந்துவிடுவோம்.

உதாரணமாக நமது கோவம் என்ற உணர்வுச் சக்தியை பிரங்ஞையுடன் கவனிப்போமாயின் நாம் எதை நோக்கி கோவப்படுகின்றோமோ அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஆரோக்கியமான படைப்பாற்றல் சக்தியாக நமது கோவம் மாற்றம் பெறும் என்பது அனுபவத்தில் பலர் கண்ட ஒரு உண்மை. ஆகவே நமக்கோ அல்லது சமூகத்திலோ அநீதிகள் பல நடக்கும் பொழுது ஒடுங்கி மனம் நொந்து மன அழுத்தத்தில் வாழவேண்டிய அவசியமில்லை. அதைக் கண்டு பயந்து ஒதுங்கியுமிருக்கவேண்டிய தேவையுமில்லை. ஏனனில் நமது கோவத்தை பிரக்ஞையுடன் எதிர்கொள்ளும் பொழுது கோவத்திற்கான மூல காரணம் நம் பிரக்ஞைநிலைக்கு வருகின்றது. அதாவது நமது கோவத்திற்கு இரண்டு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன. ஒன்று வெளிப்டையாக தெரிகின்ற காரணம். மற்றது நம்முள்ளே மறைமுகமாக பிரக்ஞையற்று இருக்கின்ற காரணம். இதை அறிவதே முக்கியமானது. அவ்வாறு மூல காரணத்தை அறியும் பொழுது அதற்கான தீர்வாக ஆரோக்கியமான படைப்பாற்றல்களும் வெளிவருகின்றது. வெளிவரும் பல படைப்பாற்றல்களிலிருந்து ஆரோக்கியமான ஒன்றைப் பிரக்ஞையுடன் நாம் தேர்வுசெய்து நமது செயற்பாடுகளை தீர்வொன்றை நோக்கி முன்னெடுக்கலாம்.

ஒருவர் மேற்குறிப்பிட்டவாறு தன்னை அறிவதற்கும் மற்றும் இயல்பாக எந்தக் கட்டுப்பாடுமின்றி தன்னை வெளிப்படுத்துவதற்குமான முதல் நிபந்தனை அம் மனிதர் பிற மனிதர்களால்; அன்புடன் ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும். ஒரு இதமான வெப்பமான நாளில் தாமரைப் பூ ஒன்று தன் இதழ்கள் ஒவ்வொன்றையும் விரித்து தன் மணம் பரப்புவதைப்போல மனிதர்களும் தங்கள் படைப்பாற்றல்களை அன்பான அரவனைப்பின் மூலம் வெளிக்கொண்டுவந்து பரப்ப முடியும். ஏனனில் நம் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய பல விதைகள் நமது பிரக்ஞையின்மையிலும் உணர்ச்சிகளிலும் உணர்வுகளிலும் உள்ளார்ந்து அமிழ்ந்துபோய் கிடக்கின்றது. அதாவது நமது பிரக்ஞையற்ற தன்மை என்பது ஒரு மாபெரும் ஆழமான கிணறு. இதற்குள் நமது ஆற்றல்கள் பல அமுங்கி மூடுண்டு கிடக்கின்றன. நமது படைப்பாற்றல்களை அமுக்கிவைத்திருக்கும் மூடியை திறப்பது என்பதும் ஒரு படைப்பாற்றலாகும். மேலும் இதற்கு சில முறைமைகளும் உள்ளன. இவ்வாறான முறைமைகளைத்தான் கார்ல் ரொஜர்ஸம் நத்தாலிய ரொஜர்ஸம் முன்வைக்கின்றனர்.

முதலாவதாக நாம் கற்கவேண்டியது, வாழ்கையின் இறுக்கத்தன்மையிலிருந்து எவ்வாறு நாம் நம்மை விடுபடுவது என்பது முக்கியமானது. இரண்டாவதாக நமது வாழ்க்கையை ஒரு விளையாட்டாக வாழ்வது எப்படி என்பதையும் அதை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதையும். மேலும் எவ்வாறு நமது உணர்வுகளையும் உணர்ச்சிகளை பிரக்ஞையுடன் கண்டறிவதன் மூலம் உள்ளக தடைகளை அதன் அமைப்புகளை உடைத்துக்; கொண்டு நமது படைப்பாற்றல் வெளிக்கொண்டுவரலாம் என்பதை அறிவது. இவ்வாறாக வெளிப்படுத்தப்படும் படைப்பாற்றல் என்பது பல்வேறு வழிகளில் நமது உடல் மனம் மற்றும் ஆன்மாவை இயற்கையாகவே குணப்படுத்துகின்றது. இவ்வாறான ஒரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு மானிட கோட்பாடுகளின் (Humanistic philosophy) அடிப்படை என்ன என்பதைப் புரி;ந்திருப்பது நல்லது. ஏல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொறுவிதமாக ஆற்றலிருப்பதுடன் தமது படைப்புகளை வெவ்வேறுவிதமாக வெளிப்படுத்தும் ஆற்றலிருக்கின்றது. இதை ஒரு மனிதர் தனது சுய-பிரக்ஞை சுய-புரிதல் மற்றும் உள்நோக்கிய பார்வையின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும் இது ஒரு மனிதரின் சுய வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பதுடன் அவரது பிரக்ஞைதன்மையை அதன் மேல் தளங்களுக்கு கொண்டு செல்வதற்கும் வழிவகுக்கின்றது. இதற்கு நமது உணர்வுகளும் உணர்ச்சிகளும் அடிப்படையில் சக்தி என்ற புரிதல் நமக்கு ஏற்படவேண்டும். இந்த சக்தியே படைப்பாற்றல் சக்தியாகவும் வெளிப்படுத்தப்படுவதுடன் நம்மையும் ஆரோக்கியமான மனிதராக செயற்பாட்டாளராக மாற்றுகின்றது.

ஆகவே ஒருவர் இவற்றைச் செய்வதற்கு அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும் நம்பிக்கையும் கிடைப்பது அவசியமாகின்றது. அதாவது உளவியல் பாதுகாப்பு மற்றும் உளவியல் சுதந்திரம் என கார்ல் ரோஜர்ஸ் வரையறுக்கின்றார். இவற்றுடன் அவரது மகள் நத்தாலியா படைப்பாற்றலை துண்டும் உணர்வுகளையும் அதற்கான சவால்களையும் அளிக்கும் சுழலும் வேண்டும் என்கின்றார். இதை மேலும் விரிவாக்கினால் புதிய அனுபங்களை சவாலுடன் சந்திப்பதற்கான சுழல் இருக்கவேண்டும் என்கின்றார். எந்தவொரு சுழலிலும் திறந்த மனதுடன் இருப்பதுடன் நமது உணர்வுகள் உணர்ச்சிகள் தொடர்பான பிரக்ஞையும் இருக்கவேண்டும். இவ்வாறான ஒரு சுழலில் நமது உடல் மனம் உணர்ச்சிகள் ஆன்மா என அனைத்துக் கூறுகளும் ஒன்றினைந்து நமது படைப்பாற்றலின் மூலத்தையும் கற்பனை ஆற்றலையும் இயங்கச் செய்து படைப்புச் சக்தியாக வெளிக்கொண்டுவருகின்றன என்கின்றார்.

இவ்வாறன வெளிப்படுத்தும் படைப்பாற்றல் மூலமாக ஒருவருக்குள் இருக்கும் உள்ளார்ந்திருக்கும் பன்முகப் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவரலாம். மேலும் உள்ளக மன அல்லது உளவியல் முரண்பாடுகளை களைவதுடன் நமது உணர்ச்சிகளுக்கான வடிகாலகவும் இவை அமையலாம். இவ்வாறான வெளிப்படுத்தும் படைப்பாற்றல் என்பது பல வகைகள் உண்டு. உதாரணமாக உடலசைவுகள், வரைதல், ஓவியம், சிற்பங்கள் வடிவமைத்தல் அல்லது செதுக்கள், இசை, எழுதல், சத்தம், பேச்சு என சிலவற்றைக் கூறலாம். இவ்வாறன சுய படைப்பாற்றல்களை வெளிக்கொண்டுவர வழமையான கட்டுப்பாடுகளோ ஒழுங்கங்களோ தேவை இல்லை. மாறாக ஒருவர் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்த பூரண சுதந்திரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான படைப்பாற்றல்களின் நோக்கம் இவ்ற்றை வெளியீடுதல் அல்லது காட்சிப்படுத்தல் என்பதற்கும் மேலாக ஒருவர் தன்னை அறிவதற்கான ஒரு வழிமுறையே இது. இவ்வாறான பல வழிகளின் மூலம் நமது உள் உணர்வுகளை உணர்ச்சிகளை வெளிவிட்டு மனதை சுத்தம செய்து நம் ஆன்மாவை உயர் நிலை ஒன்றிக்கு வளர்த்துச் செல்லலாம். ஏனனில் இந்த முறைமையானது மனம் உடல் மற்றும் உணர்ச்சிகள் ஒன்றினைந்து ஒரு மனிதரின் உள்ளுணர்வையும் அவரது கற்பனை திறன்களையும் வெளிக்கொண்டுவருகின்றன. இதன் மூலம் தன்னை தேடுவதற்கும் அறிவதற்கும் தன்னுடன் உரையாடுவதற்கும் உடல் மனம் ஆன்மா என் அனைத்தையும் ஒன்றினைக்க வழிவகுக்கின்றது. இதன் மூலம் நமது பிரக்ஞை இன்னுமொரு உயர் நிலைக்குக்கு தளத்திற்கு கொண்டு செல்வதுடன் நமக்குள் மறைந்திருக்கும் முழுமையான படைப்பாற்றலையும் வெளிக்கொண்டுவர வழிவகுக்கின்றது. அதாவது படைப்பாற்றலுக்கான செயற்பாட்டு அனுபவம் என்பது தேடுதல், பரிச்சித்தல், பொருட்களுடன் விளையாடி அவற்றை வீணாக்கல் அல்லது குழப்பல் என பல விளையாட்டுத்தன்மைகளைக் கொண்டிருத்தல் என்பவற்றுடன் தெரியாத ஒரு உலகத்தின் உள்ளே பயமின்றி செல்லல் எனவும் கூறலாம்.

இவ்வாறான செயற்பாட்டுத் தன்மைக்கு பல தடைகள் இருக்கின்றன. அவை என்ன? நமது பிரக்ஞையற்ற நிழழை ஏற்றுக்கொள்வது முதலாவது. அதை பிரக்ஞை என்ற ஒளி ஏற்றிக்; கவனிப்பது என்பது இரண்டாவது. இவ் இரண்டினாலும் நமது இரு அந்தங்களில் இருக்கின்றவை எதிர் எதிர் சக்திகள் முட்டிமோதாது ஒரு இணக்கத்திற்கு வருகின்றன அல்லது ஒன்றினைகின்றன. இந்த சமநிலை இணைவே நமது வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான படைப்பாற்றல் வெளிப்பாட்டிற்கும் ஆதாரமான அடித்தளமாகின்றது.

இதன் விளைவாக நாம் பிறரின் அனுமதி, ஏற்றுக்கொள்ளல், மற்றும் அங்கீகாரம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டு, நமது சுயாதினமான வெளிப்பாடிற்கான சுதந்திரமான உரிமையை மீளப்பெறலாம். இவ்வாறன ஒரு நிலையிலையே நமது படைப்பாற்றலானது சுயாதினமானதாகவும் தனித்துவமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.இறுதியாக இது தன்னையறிதல் மற்றும் தன்நம்பிக்கையை வளர்ப்பதை நோக்கிய பாதைகளில் பயணிக்கின்றது.

படைப்பாற்றல் என்பது அடிப்படையில் வாழ்க்கைச் சக்தி. இது நதியைப் போல நம் எல்லோருக்குள்ளும் பாய்ந்து சென்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறு பாய்ந்து செல்லும் சக்தியை நாம் அடக்கி தேக்கி வைத்திருப்போமேயானால் நாம் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி மன அழுத்தத்தம் மனப் பாரம் கவலை என பல எதிர்மறைப் பண்புகளுக்கு வழிகோலலாம். மேலும் இந்த படைப்பாற்றல் சக்தியை பயன்படுத்தாது அடக்கிவிடுவதுதான் வன்முறை பாதைகளுக்கும் வித்திடுகின்றது. இவ்வாறான எதிர்மறை சக்திகளை நிராகரிப்பதும் அடக்குவதும் மேலும் மேலும் நமக்கு பாதிப்பையே தருகின்றது. அதாவது தனிப்பட்ட முறையிலும் உலகளவிலும் நமது எதிரியாகின்றது. ஆகவே மேற்குறிப்பிட்டவாறான வெளிப்படுத்தும் படைப்பு வழிமுறைகள், நமது வாழ்க்கைச் சக்தி எனும் நதி ஆரோக்கியமாகவும் நேர் மறைப்பண்டனும் ஓடிக்கொண்டிருப்பதற்கு உதவுகின்றது. மறுபுறம் இச் சக்திப்பரிமாற்றமானது நமது ஆன்மீக வாழ்விற்கும் வழியுருவாக்கின்றது. இவ்வாறன சக்திப்பரிமாற்றம் நடைபெறுவதற்கும் நேர் மறை சக்தியாக ஊற்றெடுப்பதற்கும் நமது அனைத்து சக்திகள் தொடர்பாகவும் நாம் பிரக்ஞையாக இருக்கவேண்டும். இது நமது உடல் உணர்ச்சி உணர்வு மனம் ஆன்மா என்பவற்றை ஒன்றினைத்து முழுமையாகி நமக்குள் அமைதியை ஏற்படுத்துகின்றது. அதாவது நமக்குள் பிளவுபடுத்தப்பட்டிருக்கும் இரு எதிர்முனைகளான ஆண்மை பெண்மை என இருவகையான பண்புகளை ஒன்றிணைக்கின்றது. இவ்வாறான உயர்ந்த நிலையை அடைவதற்காக நமது நாளாந்த வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முரண்பாடுகள் கஸ்டங்கள் என்பவற்றைக் கண்டு விலகி ஓடுவதற்காக தியானம் மற்றும் பல்வேறு வகையான ஆன்மீகத் தேடுதல்களில் ஈடுபடுவது தீர்வல்ல. ஏனனில் இவ்வாறு விலகி ஒடுவது என்பது தற்காலிக நிவராணம் அல்லது அமைதியே. இது நமக்கு நிரத்தரமான தீர்வைத் தராது.

நாம் பிரக்ஞைபூர்வமாக ஒவ்வொன்றையும் அணுகினால் கவனித்தால் நமக்குளிருக்கும் வெளியுலகு தொடர்பான நமது பார்வையை வெளிப்படுத்துவதுடன், பல உளவியல் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு வழி காண்பிக்கின்றது. மறுபுறம் பிரக்ஞைபூர்வமாக ஒரு படைப்பை வெளிப்படுத்தினால்; அது பன்முகத்தன்மை அல்லது பரிமாணங்களைக் கொண்டதாகவும் முழுமையான படைப்பாற்றல்களுடன் ஆழமானவையாக ஆரோக்கியமான தீர்வுகளை முன்வைப்பனவையாகவும் இருக்கும். இது மோசமான பிற்போக்கான சமூக அரசியல் தலைமைகளின் பின்னால் எந்தக் கேள்வியுமின்றி பின் செல்வதை பிரக்ஞைபூர்வமாகத் தடுக்கின்றது. இதற்கு நாம் நம்மைப்பற்றியும் நம்முள்ளே உள்ளன பற்றியும் மற்றும் நமக்கு வெளியே நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொன்;றைப் பற்றியும் பிரக்ஞை உள்ளவர்களாக இருக்கவேண்டும். உதாரணமாக நமது மூச்சு, சிந்தனை, செயற்பாடுகள், உணவு, நீர், சுற்று சுழல், இயற்கை, கலாசாரம், அரசியல், மற்றும் சமூக முரண்பாடுகள். இதன் மூலம் நம்மிடமிருக்கும் அடிப்படையான இயங்கும் வாழ்க்கைச் சக்தியை ஆரோக்கியமாகப் பயன்படுத்தலாம். நமது படைப்பாற்றலை வெளிப்படுத்துவதே இந்த சக்திதான். இந்த சக்தி எல்லையற்றளவில் நம்மிடம் உள்ளது மட்டுமல்ல நமது உடல் மனம் ஆன்மா என் அனைத்தையும் இணைக்கின்றது. இந்த இணைப்பே நமக்குள் ஒரு வகையான அமைதி நிலைமைய உருவாக்கின்றது.

இவ்வாறான நமது பிரக்ஞை நிலையே இந்த உலகத்தையும் சமூகத்தையும் மாற்றுவதற்கு பெருமளவில் பங்களிப்பை செய்யலாம். இதற்கு நமது பிரக்ஞையின் தன்மையை ஆழமாக்கவும் பரந்ததாகவும் மாற்றவேண்டும். ஏனனில் நமது பிரக்ஞையை ஆழமாக்கும் பொழுது நம்மை புரிந்துகொள்வதுடன் பிறரையும் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றது. இதன்மூலம் நாம் எந்தளவு ஒவ்வொன்றுடனும் பிணைக்கப்பட்டுள்ளோம் (interconnected) என்பதையும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளோம் (inter-dependent) என்பதை பிரக்ஞையுடன் உணர்வதுடன் கவனிக்கலாம்;. இவ்வாறான ஒரு பிரக்ஞை நலையே மனிதர்களது செயற்பாடுகளை பொறுப்புள்ளதாகவும் ஆரோக்கியமான படைப்பாற்றல் கொண்டதாகவும் மாற்றுகின்றது. இனிவரும் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் மேற்குறிப்படவாறு பொறுப்புடன் வாழ்வதற்கும் ஆரோக்கியமாக செயற்படுவதற்கும் நம் பிரக்ஞையை வளர்பதற்கு முக்கியத்துவமளிப்பது அவசியமானதும் இன்றியமையாத ஒரு செயற்பாடும் ஆகும்.

மீராபாரதி

(ஆண்மையும் பெண்மையும்)
Dr. Natalie Rogers, Ph.D., R.E.A.T.
“I am a psychologist, group facilitator, artist, mother of three daughters, and grandmother of four. My mission for the past 30 years has been to bring creativity, soul, and spirit into our lives, to empow…er ourselves as activists in this troubled world.”
“Each individual has worth, dignity and the capacity for self-direction if given an empathic, non-judgmental, supportive environment.”
http://www.nrogers.com/

No comments: